சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 43-ஆவது கோடை விழா மலர்க்காட்சியின் நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.
சுற்றுலாத் துறையின் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியினருக்கான போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் சேலத்தைச் சேர்ந்த சரண், ஈஷாவுக்கு முதல் பரிசும், நந்தகுமார், கிரணுக்கு இரண்டாவது பரிசும், திருத்தணியைச் சேர்ந்த அப்பாஸ், ராமுக்கு முன்றாவது பரிசும் வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் கவிதா, யாமினிக்கு முதல் பரிசும், பவதரணி, மஞ்சுக்கு இரண்டாவது பரிசும், உஷா, ஜோஷிகாவுக்கு மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டது. தம்பதியர் போட்டியில் சுப்பிரமணி-கலைச்செல்விக்கு முதல் பரிசும், ஏற்காடு ரமேஷ்-வாணிஸ்ரீக்கு இரண்டாவது பரிசும், ஈரோடு சிவா-நித்யாவுக்கு மூன்றாவது பரிசும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் வெங்கடேசன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல், சிலம்பு, உறியடித்தல் போட்டிகள் ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. சேலம் மாவட்ட விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் சார்பில் விளையாட்டு அலுவலர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக சேலம் வன அலுவலர் பெரியசாமி கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.
சிலம்பு போட்டியில் ஆண்கள் பிரிவில் சிலம்பொலி அணிக்கு முதல் பரிசும், ஜெயம் கலைக் கோட்டத்துக்கு இரண்டாவது பரிசும், பெண்கள் பிரிவில் சிலம்பொலி அணிக்கு முதல் பரிசும், ஜெ.ஜெ. பயிற்சியகத்திற்கு இரண்டாவது பரிசும் வழங்கப்பட்டது.
உறியடித்தல் போட்டியில் ஆண்கள் பிரிவில் சேலம் ஆட்டையாம்பட்டி மோன்ராஜ் முதல் பரிசும், பெண்கள் பிரிவில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரிக்கு முதல் பரிசும் வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகத் தலைவர் ரத்தினகுமார் போட்டிகளை நடத்தி வைத்தார்.
அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தோட்டக்கலைத் துறை சார்பில் வழங்கப்பட்ட மரக் கன்றுகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மலர்க்காட்சியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிரித்து வருவதால், மலர்க்காட்சி திடலில் வாடிய மலர்களை அகற்றி புதிதாக ஒரு லட்சத்தில் பெங்களூரு , ஒசூர் பகுதியிலிருந்து மலர்களை வரவழைத்து மலர் திடல்களில் அலங்கரித்து வருகின்றனர்.