ஓமலூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி பகுதிகளில் தொடர்ந்து சூதாட்டம் நடத்தப்படுவதாக ஓமலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து சூதாட்ட கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஓமலூர் காவல் நிலையத்துக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஓமலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, செம்மாண்டப்பட்டியில் உள்ள ரயில்வே கரட்டுப் பகுதியில் ஒரு கும்பல் பணம் பொருள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டை அறிந்து, போலீஸார், சூதாட்ட கும்பலைச் சுற்றிவளைத்தனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலரும் தப்பியோடி விட்டனர். அவர்களை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற போலீஸார் அதிரடியாக ஏழு பேரை பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், செம்மாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவா, சண்முகசுந்தரம், செந்தில், கோபி, ஏழுமலை, ஜெயராமன், பாபு ஆகியோர் என்பது தெரிய வந்தது.இதையடுத்து சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஏழு வாகனங்கள், பணம் ரூ.47 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.