சேலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக வழக்குரைஞர் அன்பரசனை (47) போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி வழியாக ரயில் நிலையத்துக்கு தினமும் (13 பி) என்ற அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம் போல அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து அரசுப் பேருந்து புறப்பட்டது. கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் (51) பேருந்தை ஓட்டி வந்தார்.
இதனிடையே, பேருந்து காலை 9.30 மணிக்கு சீலநாயக்கன்பட்டி பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய ஒருவர் பேருந்தை மாட்டு வண்டி போல மெதுவாக ஓட்டுகிறாயா எனக் கூறி தகாத வார்த்தை பேசி, திடீரென தான் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலால் ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் ஓட்டுநருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
உடனே பொதுமக்கள் சிலர் ஓட்டுநரைத் தாக்கிய நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஓட்டுநரைத் தாக்கியவர் மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அன்பரசன் என்பதும், நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணிபுரந்து வருவதும் தெரியவந்தது. இவர் தினம்தோறும் மாசிநாயக்கன்பட்டியில் இருந்து பேருந்தில் சீலநாயக்கன்பட்டிக்கு வந்து, அங்கிருந்து நாமக்கல் சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று பேருந்தை ஓட்டுநர் மிக மெதுவாக ஓட்டியதால், கோபமடைந்து அவரை தாக்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாக வழக்குரைஞர் அன்பரசனை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை சிறையிலடைத்தனர்.