சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (மே 19) நடைபெற உள்ளது.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட கோட்டங்களில் புதிய கட்டடத்துக்கான சொத்து வரி, காலி மனை வரி மற்றும் குடிநீர் இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைப்பு பெறுவதற்கு, புதைக் குழி சாக்கடை வைப்புத் தொகை, கட்டட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் மே 19-ஆம் தேதி காலை 8.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெறும்.
மேலும் புதிய கட்டடத்துக்கான சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் இணைப்பு , புதைக்குழி சாக்கடை இணைப்பு போன்றவைகளுக்காக விண்ணப்பிக்கும் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் பட்சத்தில் 7 நாள்களுக்குள் உரிய ஆணைகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளார்.