ஓமலூர் அருகே மின்னல் பாய்ந்ததில் ஆறு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
ஓமலூர் அருகே உள்ள சிக்கம்பட்டி ஊராட்சியில் பெரியகாடம்பட்டிகிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் விவசாயி ராமராஜ்-சின்னபொண்ணு தம்பதியினர் தங்களது தோட்டத்தில் எட்டு செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்கள் ஆடுகளை பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்து மாலையில் வீட்டில் கட்டி வைத்து வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த ஒரு வாரமாகவே ஓமலூர் வட்டாரக் கிராமங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புதன்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், இடி மின்னலுடன் மழை பெய்யத் துவங்கியது. இதையடுத்து, சின்னப்பொண்ணு ஆறு ஆடுகளை அவரது வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் கட்டியிருந்தார். இரண்டு ஆடுகளை வீட்டின் வராண்டாவில் கட்டியிருந்தார். அப்போது பலத்த மழையுடன்,பலத்த இடி மின்னல்
அடித்தது.
இந்தநிலையில், விவசாயி ராமராஜ் வீட்டின் அருகில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பலத்த இடி சத்தத்துடன் பலமான மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் அருகில் கட்டியிருந்த இருந்த ஆறு ஆடுகளை மின்னல் பலமாகத் தாக்கியது.இதில் ஆடுகள் அதே இடத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தன. இதேபோன்று அருகில் இருந்த மரங்கள், வீடுகள் சேதமடைந்தன.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கிராம நிர்வாக அலுவலகர் கீர்த்திவாசன், மின்னலால் இறந்த ஆடுகள், கருகிய மரங்கள்,சேதமடைந்த பொருள்கள் குறித்து விசாரணை நடத்தி சேத மதிப்பைக் கணக்கிட்டார்.