சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என மாநகர அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வர் கே.எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் நவம்பர் 14 ஆம் தேதி இரவு சேலம் வருகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் எம்.பி. வி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜு ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் மாநகர மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாசலம் பேசியது:
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் நவம்பர் 14 ஆம் தேதி இரவு சேலம் வருகிறார். அவருக்கு திருவாக்கவுண்டனூர் ரவுண்டானா அருகில் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். வரும் நவம்பர் 15 ஆம் தேதி நங்கவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். பின்னர் மாலை சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டலம் நிர்வாகிகளைச் சந்தித்து கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
வரும் நவம்பர் 16 ஆம் தேதி எடப்பாடி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். பின்னர் மாலையில் கொண்டலாம்பட்டி அம்மாப்பேட்டை பகுதி நிர்வாகிகள் சந்தித்துப் பேசுகிறார்.
வரும் நவம்பர் 17 ஆம் தேதி அரசு சார்பில் நடைபெறும் விழாக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார்.
வரும் நவம்பர் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு இரும்பாலை பிரிவு அருகில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறார் என்றார்.