ஆந்திர மாநிலத்தில் வேலைக்கு சென்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆத்தூரை அடுத்த வளையமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). சமையல் தொழிலாளி. இவர் கெங்கவல்லி வட்டம், கூடமலை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் போர்வெல் வாகனத்தில் சமையலராகப் பணி செய்து வந்தார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், பந்தலூரில் கடந்த 7 -ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு வெளியே சென்றவர் புதைக் குழியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இது குறித்து ஆந்திர போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை செய்து சடலத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜேந்திரனின் மனைவி மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஊரகக் காவல் ஆய்வாளர் ஆர்.சரவணன், ராஜேந்திரனின் குடும்பத்தினரை சமாதானம் செய்தார். உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மனைவி ராதா, இரு மகள்கள் உள்ளனர்.