சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் ஆட்டையாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.
கடந்த நவம்பர் 8 இல் மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 14 வயதுக்குள்பட்டோருக்கான 45 எடை கிலோ பிரிவில் ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கௌரிசங்கர் கலந்து கொண்டு நான்கு போட்டிகளிலும் "நாக் அவுட்' முறையில் வென்று முதலிடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேசன், முத்துக்குமார் ஆகியோர் கூறுகையில், இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளனர்.
நடப்பாண்டு புதிதாகச் சேர்க்கப்பட்ட மல்யுத்த போட்டிக்கு 10 மாணவர்கள் சென்றனர். இவர்களில் கட்டடத் தொழிலாளி ரவி - சுமதி தம்பதி மகன் 8-ஆம் வகுப்பு பயிலும் கௌரிசங்கர் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே மாநில அளவில் முதலிடம் பிடித்து தேசிய போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றனர்.