சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த கிராமத்துக்கு வந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த ஊர் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையம் கிராமமாகும். இங்கு அவரது பூர்வீக வீட்டில் அவரது தாயார் தவசாயியம்மாள் வசித்து வருகிறார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் நெடுஞ்சாலை நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஒவ்வொரு முறை சேலம் மாவட்டத்துக்கு வரும் போதும், அவர் தனது சொந்த கிராமத்துக்கு சென்று தனது தாயாரின் உடல் நலம் குறித்து விசாரித்து அவரிடம் ஆசிபெறுவது வழக்கம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சிலுவம்பாளைம் கிராமத்துக்கு வந்த முதல்வர் தனது தாயாரிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், அவரை வணங்கி ஆசிபெற்றார்.
தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் குறைகேட்டு மனுக்கள் வாங்கிய அவர், உள்ளூர் மக்களிடம் சற்றுநேரம் உரையாடிய பின்னர் விடைபெற்றுச் சென்றார்.