காவல் துறையின் ரோந்து வாகனம் மீது லாரி மோதிய சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர் அருகேயுள்ள சிக்கனம்பட்டி கிராமத்தில், சேலம் விமான நிலையம் அருகே போக்குவரத்து காவல் நிலையம் உள்ளது.
இந்தக் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் பாஸ்கரன்,பரமேஸ்வரன் ஆகியோர் வியாழக்கிழமை இரவு ஜீப்பில் சேலம் விமான நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பெல்காமிலிருந்து திண்டுக்கல் நோக்கி சர்க்கரை மூட்டைகளை ஏற்றிவந்த டிரெய்லர் லாரியானது போலீஸ் ரோந்து ஜீப்பின் மீது பலமாக மோதியது. இதில், ஜீப்பின் பின்புறம் முழுவதும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். இதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து போலீஸார் நடத்திய விசாரணையில் லாரியை ஓட்டி வந்தது, துறையூரைச் சேர்ந்த டிரைவர் சத்தியநாராயணன் என்பதும், அவர் மதுஅருந்திவிட்டு லாரியை ஓட்டிவந்ததும் தெரிந்தது. இதன்பின்னர், விபத்துக்கான போலீஸ் வாகனம் உடனடியாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.