கொடைக்கானலில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் சரவணன் தலைமை வகித்தார். நகர்நல அலுவலர் ராம்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தெருக்களில் குப்பைகளுக்கு தீ வைக்கக் கூடாது. மக்கும், மக்காத பொருள்கள் எனப் பிரித்து கொடுக்க வேண்டும், வெப்ப மானிகள் மற்றும் பாதரசம் கொண்ட பொருள்களை குப்பைத் தொட்டியில் போடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இதில் குப்பைத் தொட்டிகளில் ஆபத்து ஏற்படுத்தும் பொருள்கள் மற்றும் கட்டட கழிவுகள், தோட்டக் கழிவுகள், மரக் கழிவுகள் மற்றும் அதிக குப்பைகளை கொட்டுதல், குப்பைத் தொட்டிக்கு வெளியே கொட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு அபராதத் தொகையாக ரூ. 250 முதல் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.
கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் சுப்பையா, 12 ஆவது வார்டு பொது நலச்சங்கத் தலைவர் ரவீந்திரன்,உணவகம் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க மேலாளர் சுரேஷ் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.