ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சோழியப்பகவுண்டனூரைச் சேர்ந்தவர் பி.பழனிச்சாமி. இவர் பெங்களூர், கோவை, கரூர் மற்றும் மூலனூர் உள்ளிட்ட இடங்களில் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை கரூரில் உள்ள அவரது நிதிநிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் வருமான வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம் மற்றும் சோழியப்பகவுண்டனூரில் உள்ள வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். இச்சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.