கொடைக்கானல் அரசு அலுவலகங்களில் சேதமடைந்துள்ள கழிப்பறைகளை சீரமைக்க அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் நகராட்சி, அண்ணாநகர் மற்றும் வில்பட்டியிலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பூம்பாறை பகுதியிலுள்ள அரசு அலுவலகம் மற்றும் கூக்கால், கும்பரையூர், கே.சி.பட்டி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள கழிப்பறைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் அவற்றில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து அரசு அலுவலக பணியாளர்கள் கூறியதாவது: இக்கழிப்பறைகளை பராமரிக்க பணியாளர்கள் இல்லை. இதனால் இங்கு பணியாற்றும் பணியாளர்கள் வெளியிடங்களில் உள்ள கழிப்பறைக்குச் செல்கின்றனர். எனவே கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சேதமடைந்த கழிப்பறைகளை சீரமைக்கவும், அவற்றை பராமரிக்கவும், கூடுதலாக பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.