பழனியில் இரும்புக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழனி - திண்டுக்கல் சாலையில் இரும்புக்கடை வைத்திருந்தவர் முருகேசன் (48). இவர் சண்முகபுரம் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது இரு மகன்களும் வெளியூரில் படித்து வரும் நிலையில், கணவன், மனைவி இருவரும் கடையை நிர்வகித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் மனைவி கடையில் இருந்த நிலையில், முருகேசன் வீட்டுக்கு வந்தவர் இரவு நீண்ட நேரமாகியும் கடைக்கு வராததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் சென்று பார்த்தபோது முருகேசன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வீட்டில் இருந்து 15 பவுன் நகை மாயமானதால் போலீஸார் தேடுதலை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே, அவரை கொலை செய்ததாக பழனி அண்ணாநகரை சேர்ந்த தர்மர் மகன் சித்திரவேலு (25), பழனி இடும்பன் நகரை சேர்ந்த நாகலிங்கம் மகன் கணேசன்(22) ஆகியோர் சிவகிரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் முன்னிலையில் வாக்குமூலம் அளித்து சரணடைந்தனர்.
கணேசன் கம்பி வேலை செய்ததால் முருகேசனுடன் பழக்கம் ஏற்பட்டதும், அவரிடம் நிறைய பணப் புழக்கம் இருந்ததால், செவ்வாய்க்கிழமை இருவரும் வீட்டுக்கு சென்று, முருகேசனிடம் செலவுக்கு பணம் கேட்டபோது அவர் தராததால், இருவரும் சேர்ந்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வியாழக்கிழமை கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் இருவரையும் கைது செய்தனர். மேலும் திருப்பூரில் அவர்களால் விற்பனை செய்யப்பட்ட 15 பவுன் நகையையும் மீட்டனர்.