பழனியில் பெற்ற கடனுக்கு மேல் அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பழனியை அடுத்த கோரிக்கடவு வடக்குத் தெருவை சேர்ந்தவர் கன்னிமுத்து. இவரது மனைவி பாப்பாத்தி (41). இவர் தனது சொந்த செலவுக்காக பக்கத்து வீட்டில் உள்ள நீன்பார் என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக வீட்டுப்பத்திரமும், வெள்ளைத்தாளில் கையெழுத்தும் போட்டு தந்தாராம். மாதா மாதம் ரூ. 2,500 வட்டி கொடுத்து வந்த நிலையில், தற்போது ரூ. 3 லட்சம் தர வேண்டுமெனவும், அல்லது வீட்டை காலி செய்து தர வேண்டும் என்றும் வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் மனமுடைந்த பாப்பாத்தி வீட்டில் பூச்சிமருந்தை குடித்து மயங்கினார். உடனடியாக உறவினர்கள் அவரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.