காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து, வத்தலகுண்டு பேரூராட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் அடுத்துள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் சுகாதார பட்டயப் படிப்பு மாணவர்கள், வத்தலகுண்டு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து செவ்வாய்க்கிழமை பயிற்சி மேற்கொண்டனர். பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கு வளாகத்தில், செயல் அலுவலர் கமர்தீன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
அப்போது, காய்கறி கழிவுகள் மூலம் உரம் தயாரித்தல், வாழை இலை, மட்டைகளைப் பயன்படுத்தி பை தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை உருவாக்குதல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தார்சாலை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
இதில், காந்திகிராம பல்கலை. பொறியாளர் ரூசோ, தொழில்நுட்ப அலுவலர் அப்துல் வகாப் மற்றும் 58 மாணவர்கள் கலந்து கொண்டனர்.