கொடைக்கானல் ஏரியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை இரவு மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
கொடைக்கானல் ஏரியை பாதுகாக்கும் பொருட்டு, ஏரி பகுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மீன்வளத் துறை சார்பில் ஏரியில் மீன் குஞ்சுகள் விடப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியில் எந்தத் துறையினரும் மீன் குஞ்சுகள் விடவில்லை.
இதனால், கொடைக்கானல் ஏரியில் பாசிகள் மற்றும் இலை செடிகள் அதிகம் வளர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. ஏரியும் பொலிவிழந்து வருகிறது. இந் நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பிரையண்ட் பூங்கா அருகிலுள்ள படகு குழாம் பகுதி ஏரியில் பில் கண்டை வகையைச் சேர்ந்த 5 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, படகு குழாம் மேலாளர் விமல் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் அன்பரசன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சரவணன் ஏரியில் மீன் குஞ்சுகளை விட்டார். இதில், நகராட்சி அதிகாரிகள், படகு குழாம் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படகு குழாம் அலுவலர் சகாயராஜ் நன்றி கூறினார்.