போக்குவரத்து தொழிலாளர்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
     அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 13ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7  அம்ச கோரிக்கைகளுக்கு, அரசு உறுதி அளித்தபடி தீர்வு காணப்படவில்லை எனக் கூறி, திண்டுக்கல் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக  அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.    இதில், தொழிலாளர் முன்னேற்ற பேரவை (திமுக), சிஐடியூ, ஏஐடியூசி, பணியாளர் சங்கம்(டிடிஎஸ்எப்ஃ), ஹெச்.எம்.எஸ்., பட்டாளி மக்கள் பேரவை உள்ளிட்ட தொழிற் சங்கங்களைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.
      இந்தப் போராட்டம் 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது.  இதனிடையே, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, காத்திருப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை முடிவுக்கு வந்தது.
போடி:     போடி போக்குவரத்துக் கழக பணிமனையில், தொழிற் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அலுவலக அறை முன்பாக அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போடி போக்குவரத்து பணிமனையில் மொத்தமுள்ள 80 பேருந்துகளில் 50 பேருந்துகள் வரை இயக்கப்படவில்லை.
இதனால், போடி பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. பயணிகள் தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி தேனி மற்றும் போடியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com