கொடைக்கானலில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து, நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.
கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாமல் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெறாமல் காட்டேஜ்கள் இயங்கி வந்தன. இதனால், கொடைக்கானல் பகுதிகள் மாசடைந்து வருகின்றன.
அதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவின்படி, அப்சர்வேட்டரி, செவன் ரோடு, பர்ன்ஹில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த 47 கட்டடங்களுக்கு, கடந்த சில தினங்களாக நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது.
இந் நிலையில், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் ஏரிச் சாலைப் பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் விடுதி கட்டடம், தனியார் காட்டேஜ்கள், தங்கும் விடுதியுடன் கூடிய வணிக வளாகம் உள்ளிட்ட 7 கட்டடங்களுக்கு சீல் வைத்தனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் சரவணன் கூறுகையில், கொடைக்கானலில் தற்போது 7 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. சில கட்டட உரிமையாளர்கள் நீதிமன்ற தடையாணை மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் கட்டட ஒழுங்குமுறைக்காக விண்ணப்பம் செய்துள்ள கட்டடங்கள் தவிர, மீதமுள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடரும். வரும் காலங்களில் கொடைக்கானலில் கட்டப்படும் கட்டடங்களுக்கு விதிமுறைகள் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.