பழனியில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
பழனியை அடுத்த மேற்கு ஆயக்குடியை சேர்ந்தவர் முருகன் மகன் குமரேசன். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மடத்துக்குளம் தாலுகா திப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கோவை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பழனி சார்பு நீதிமன்றத்தில் குமரேசனின் தந்தை முருகன், இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி ரூ.9 லட்சத்து 7 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் போக்குவரத்து கழகம் இழப்பீட்டைத் தராமல் காலம் தாழ்த்தியதால் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.12 லட்சம் ஆனதைத் தொடர்ந்து சனிக்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் பழனி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கோவை அரசுப் போக்குவரத்து கழக பேருந்தை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.