பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இது தவிர, கிருத்திகை நட்சத்திரம், திருப்பள்ளி எழுச்சி உள்ளிட்ட சிறப்பு நாள்களும் சேர்ந்ததால், சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
படிவழிப் பாதையில் ஏராளமான பக்தர்கள் சென்றாலும், விஞ்ச், ரோப் கார் நிலையங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் டிக்கெட் பெற காத்திருந்தனர். மலைக் கோயிலில் இலவச தரிசனம் மட்டுமின்றி, ரூ. 200 கட்டண தரிசன வரிசையும் நீண்டிருந்தது. இதனால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரமானது.
இரவில், தங்கமயில் மற்றும் தங்கத்தேர் புறப்பாட்டை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலாநிலை முன்பு குவிந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதலாக போலீஸார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.