கொடைக்கானல் ஏரிச்சாலையை சுற்றி புதிதாத தள்ளு வண்டி கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதி, செவன் ரோடு, உட்வில் சாலை, பூங்கா சாலைகளில் தள்ளுவண்டி கடைகள், வாகனங்களில் கடை, தேனீர் கடை மற்றும் சிறு உணவகங்கள் வைக்கப்பட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், அப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் ஏரிச்சாலை வியாபாரிகள் கூறியது: நகராட்சியிடம் தரைக் கடை வாடகைக்கு எடுத்தவர்கள், அவற்றை உள்வாடகைக்கு கொடுத்து விட்டு, ஏரிச்சாலை, பூங்கா அருகே சாலையோரம் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், வாடகை செலுத்தும் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், நகராட்சி சார்பில் கடை இல்லாத ஒரு சில நபர்களுக்கு தள்ளு வண்டிகள் வைத்துக் கொள்ள டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நாங்களும் பாதிக்கப்படுகிறோம் என்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: கொடைக்கானலில் வழக்கம்போல விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. பகலில் குளிரும், இரவு நேரங்களில் பனியும் நிலவுகிறது. இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களையும், மாலை நேரங்களில் ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.