குஜிலியம்பாறை பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 11ஆவது மாநாடு குஜிலியம்பாறை அடுத்துள்ள பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்ச்சியாக, பிரதிநிதிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலர் வி.சண்முகம் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி ஆற்றிலிருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுமார் 16 கி.மீட்டர் தூரத்தில் உள்ள குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடசந்தூர் வட்டத்தை 2ஆக பிரித்து, குஜிலியம்பாறையை புதிய தாலுகா தலைநகராக அமைக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநிலத் துணைத் தலைவர்கள் டி.ரவீந்தரன், வி.செல்வராஜ், புதிய மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.