பழனி அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பழனியை அடுத்துள்ள லட்சலப்பட்டியில்நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊருக்கு அரசுப் பேருந்து நாள் ஒன்றுக்கு 5 முறை வந்து செல்லுமாறு வழித்தடங்கள் உள்ளன. ஆனால் அரசுப் பேருந்துகள் இங்கு வராமல் வேறு ஊர்களுக்கு சென்று வந்தன. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 3 நாள்களில் ஒருமுறை கூட பேருந்து ஊருக்குள் வராதநிலையில் திங்கள்கிழமை ஊருக்குள் வந்த அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த பழனி தாலுகா போலீஸார் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிமேல் பேருந்து முறைப்படி ஊருக்குள் வந்து செல்லும் என்று கூறியதையடுத்து பேருந்தை பொதுமக்கள் விடுவித்தனர்.