பழனி அடிவாரம் வர்த்தகர்கள் சங்கத்தின் 35ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழனி அடிவாரம் சோழிய வேளாளர் மடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுகுமார், கமலசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் தங்கராஜ், பொருளாளர் வேல்முருகன், துணைச் செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில் கடந்த ஆண்டு சங்கத்தின் வரவு, செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் விவரக்குறிப்புடன் கூடிய அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் பழனிக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால், இங்கிருந்து சென்னை, ராமேசுவரம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம் போன்ற ஊர்களுக்கு நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என்றும், பழனி பகுதிக்கு அதிகமான முன்பதிவுகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதே போல் நகரின் மையத்தில் அமைந்துள்ள வையாபுரி கண்மாயை சீரமைத்து படகுகுழாம் அமைக்கவும், பேருந்து நிலையத்தில் பக்தர்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்தி தரவும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் முனியப்பன், செந்தில்குமார், ஆலோசகர் மதனம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.