சொத்து தகராறில் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞரை கொலை செய்த உறவினர்கள் 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் முத்தழகுப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் ராஜ்குமார் (32). ஒப்பந்தக்காரராக பணியாற்றி வந்தார். பூர்வீக சொத்துகளை பிரிப்பது தொடர்பாக ராஜ்குமார் குடும்பத்துக்கும், அவரது தாய்மாமா ராயப்பன் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த இப்பிரச்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ராஜ்குமார் குடும்பத்திற்கு சாதமாக அமைந்ததால், ராயப்பன், மகன்கள் சுரேஷ், செல்வம் ஆகியோர் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், முத்தழகுப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜ்குமாரை, சுரேஷ், செல்வம் உள்ளிட்ட 4 பேர் சனிக்கிழமை வழிமறித்து வெட்டினர். பலத்த காயங்களுடன் ராஜ்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சுரேஷ், செல்வம், அஜீத் பாண்டி ஆகிய 3 பேரை போலீஸார் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தினர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள புல்வெட்டியான் சார்லஸ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.