மானிய விலை சமையல் எரிவாயு உருளைக்கான உரிமை விட்டுக் கொடுத்தலில் தமிழகம் 3ஆவது இடத்தில் உள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
திண்டுக்கல் தனியார் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய பாஜக. ஆட்சியின் 3 ஆண்டு சாதனை குறித்த பொதுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, அவர் பேசியதாவது:
மானிய விலை சமையல் எரிவாயு இணைப்புகளை விட்டுக் கொடுத்தவர்கள் பட்டியலில், தமிழகம் 3ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 7 லட்சம் பேர் ஏழை, எளியவர்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் மானியங்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.
தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் 6 லட்சம் ஒப்பந்தங்கள் கடந்த 3 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. எவ்வித முறைகேட்டிற்கும் வழியில்லாமல், இணையம் மூலம் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது மிகப் பெரிய சாதனை.
இதுபோன்ற பல்வேறு சிறந்த பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசின் நீட்சி, தமிழகத்திலும் வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது என்றார்.
முன்னதாக மானிய விலை சமையல் எரிவாயு உருளை இணைப்புகளை விட்டுக் கொடுத்த பயனாளிகளுக்கு, பிரதமர் மோடியின் பாராட்டுக் கடித நகலை தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.
கூட்டத்தில் பாஜக மாநிலச் செயலர் ஆர்.சீனிவாசன், நிர்வாகிகள் பிஜி.போஸ், எஸ்.கே.பாலாஜி, கே.திருமலைசுவாமி, டி.ஏ,திருமலை பாலாஜி, தொழிலதிபர் என்.சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.