தொப்பம்பட்டி அருகே குறிப்பிட்ட 40 குடும்பங்களுக்கு மட்டும் கொந்தயம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க மறுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி அடுத்துள்ள கொந்தயம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர்.
பிரச்னை குறித்து அவர்கள் கூறியதாவது: கொத்தயம் கிராமத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் நடுத்தெருவில் உள்ள 40 வீடுகளுக்கு மட்டும் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வழங்க கொந்தயம் ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில், கடந்த மே 29-ஆம் தேதி பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர், விரைவில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
ஆனாலும் தண்ணீர் கிடைக்காததால், கடந்த வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்தோம். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மட்டுமே அலுவலகத்தில் இருந்ததால், அவரிடம் முறையிட்டோம். உடனடியாக தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளாதாகக் கூறி எங்களை அனுப்பி வைத்தார். இதனை அறிந்த சிலர், எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கும் குழாய்க்கான இணைப்புகளை துண்டித்துள்ளனர். அதன் காரணமாக இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை.
மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இந்த பிரச்னைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.
வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள மோர்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆடுகண்டானூர் கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இந்த பகுதியினருக்கு குடிநீர் வழங்க 2 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. வறட்சியின் காரணமாக, 2 ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், கடந்த 1 மாதத்திற்கு முன்னதாக ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் கடந்த 10 நாள்களாக காவிரிக் குடிநீரும் வரவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த ஆடுகண்டானூர் கிராம மக்கள், வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது மாலிக் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.