ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்து மூடப்பட்டன.
ஒட்டன்சத்திரத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி நிதி நிறுவனங்கள் இயங்கி வருவதாக, பழனி சார்-ஆட்சியருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில், செவ்வாய்க்கிழமை இரவு சார்-ஆட்சியர் வினீத், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் கே. மாரிமுத்து, காவல் ஆய்வாளர் கே. கோட்டைச்சாமி, துணை வட்டாட்சியர் முத்துச்சாமி ஆகியோர், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் உள்ள நிதி நிறுவன அலுவலகங்களில் ஆய்வு செய்தனர். அதில், அந்த நிறுவனங்கள் எந்தவித அரசு அனுமதியும் இன்றி இயங்கி வந்தது தெரியவந்தது. எனவே, அந்த நிறுவனங்களை பழனி சார்-ஆட்சியர் வினித் சீல் வைத்து மூடினார்.
இதேபோன்று, ஒட்டன்சத்திரம் நகரில் பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் நிதி நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.