கோடை வெயில் கடுமையாக உள்ளதால், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வை நடத்தி முடித்து விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போதே சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் நிலவுகிறது. இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் ஆண்டுத் தேர்வுகள் விரைவில் முடிந்துவிடுகின்றன. ஆனால், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு முடிவதில்லை. வெயில் அதிகரிப்பு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் ஆண்டுத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியது: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஒரு கல்வி ஆண்டுக்கு குறைந்தது 220 நாள்கள் பணிபுரிந்தாக வேண்டும். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் உள்ளிட்ட தவிர்க்க முடியாத விடுமுறைகளால், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி வரை வேலை பார்த்தாக வேண்டியிருக்கிறது. எனவே, கல்வித் துறை விரைவில் தேர்வை நடத்த ஒப்புக்கொள்ளாது.
இனிவரும் காலங்களில் அதிக வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நிலைமையை உணர்ந்தும், தமிழக அரசு மற்றும் கல்வித் துறை, அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதன்மூலம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது பள்ளிக்கு அருகிலுள்ள கிராமங்களில் தங்களது பள்ளியில் மாணவர்களை சேர்க்கக் கோரி ஆதரவு திரட்டும் வாய்ப்புள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்றார்.