தொடக்கக் கல்வித்துறையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பணி மாறுதல் கலந்தாய்வில் 8 பணியிடங்களுக்கான மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கான கலந்தாய்வு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிட மாறுதலுக்கு 11 பேர் விண்ணப்பித்திருந்தனர். பழனி நகர், சாணார்பட்டி, நிலக்கோட்டை, திண்டுக்கல் தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், ராஜபாளையம், ஆனைமலை ஆகிய இடங்களை பிற மாவட்டங்களிலும் தேர்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியரிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் தகுதி பெற்றிருந்தனர். அதில் கொடைக்கானல் மற்றும் குஜிலியம்பாறை தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன.
பணியிடங்களை தேர்வு செய்த 8 பேருக்கான பணி மாறுதல் ஆணையை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் த.சுப்பிரமணியன் வழங்கினார்.