கொலை முயற்சியில் ஈடுபட்ட பழனியைச் சேர்ந்த 2 இளைஞர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பொன்ராம் மகன் மணிகண்டன் என்ற லாக்மணி (29). பழனி முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் மகன் முரளி என்ற முரளிதரன் (27). இவர்கள் இருவர் மீதும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனிடையே பழனியைச் சேர்ந்த வடிவேல் என்பவரை கொலை செய்ய முயன்றதாக கடந்த மார்ச் 28 ஆம் தேதி மணிகண்டன் மற்றும் முரளிதரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.சரவணன் பரிந்துரை செய்துள்ளார். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளார்.