வத்தலகுண்டு அருகே திங்கள்கிழமை குடிநீர் பிரச்னையில் சாலையின் குறுக்கே மரத்தையும், முள்ளையும் வெட்டி போட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வத்தலகுண்டு-கெங்குவார்பட்டி சாலையில் நடந்த மறியல் காரணமாக ஜி.தும்மலப்பட்டி, கெங்குவார்பட்டி, பூலத்தூர், வத்தலகுண்டு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தகவல் கிடைத்ததும் வத்தலகுண்டு காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து, சமரசப் பேச்சு வார்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, குடிநீர் குழாய் மற்றும் மின் மோட்டாரைப் பழுது பார்க்க வேண்டும் என்றும், இப்பகுதியில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியில் தண்ணீரை ஏற்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் பலமுறை ஊராட்சி ஒன்றியத்தில் மனு கொடுத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஒரு மாதமாக குடிநீர் வழங்காததால், உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து,தற்சமயம் ஜி.தும்மலப்பட்டி கோபிநாத சுவாமி கோயில் அருகேயுள்ள குழாயை சரிசெய்து குடிநீர் விநியோகம் செய்வதாக வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவேந்திரன், ஜி.தும்மலப்பட்டி கிராம ஊராட்சி செயலர் பிரபு ஆகியோர் உறுதி அளித்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.