குறைதீர் கூட்டம் தொடர்பான புள்ளிவிவரங்கள் இல்லாமல் பெயரளவுக்கு பங்கேற்பதற்காக வந்த அலுவலர்களால் அதிருப்தி அடைந்த மாவட்ட ஆட்சியர், மனுக்கள் பெற்றுச் செல்லும் தபால் வேலைக்கு வர வேண்டாம் என எச்சரித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பா. வேலு முன்னிலை வகித்தார். அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறை அலுவலர்களிடமும், நிலுவையில் உள்ள மனு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகபட்சமாக 121 மனுக்களும், வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 96 மனுக்களும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தெரிவித்தார். குறைதீர் கூட்டத்திலும், முதல்வரின் தனிப்பிரிவிலும் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 10 நாள்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். காலதாமதம் செய்யும் அலுவலர்கள் மீதும், முறையான பதில் அளிக்காதவர்கள் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.
பின்னர் ஆட்சியர் பேசியது: குறைதீர் கூட்டத்திற்கு வரும் அலுவலர்கள், நிலுவையில் உள்ள மனு விவரம், அதன் மீது தீர்வு காண்பதற்கான கால அவகாசம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடனும் வர வேண்டும். குறைதீர் கூட்டத்தின் முக்கியத்துவத்தை அலுவலர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.