கிராமங்கள் தோறும் டெங்குவை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பழனியை அடுத்த அமரபூண்டியில் தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் இயக்க நிறுவனர் சின்னராஜ் பேசும் போது, டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவை அழிக்க அரசை விமர்சித்தால் மட்டும் போதாது. பொதுமக்களும் தங்கள் வீடுகளில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். அரசு மருத்துவமனைகளிலும் பொது சுகாதாரத்தை பேணிக் காத்தல் அவசியம். டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கிராமங்களில் உள்ள வீடுகள் தோறும் நிலவேம்பு குடிநீர் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். வீடுகளில் பப்பாளி போன்ற பழவகைகள், கீரைவகைகள் வளர்க்க பொதுமக்களுக்கு ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
பெருநகரங்களில் மாடி வீட்டு தோட்டங்களில் பிரண்டை போன்ற மூலிகை, கீரை செடிகளுக்கான விதைகளை அரசு வழங்க வேண்டும். நகரங்களை காட்டிலும் ஊராட்சிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.