கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் சிம்பிடியம் தற்போது பூத்துள்ளது.
இப்பூங்காவில் ஆண்டு தோறும் 30-க்கும் மேற்பட்ட வகைகளில் பூக்கும் மலர்களும், பல ஆண்டு களுக்கு ஒரு முறை பூக்கும் பூக்களும் உள்ளன. மேலும் இங்குள்ள கண்ணாடி மாளிகையில் 50-க்கும் மேற்பட்ட கற்றாளை வகைகளும், 80 வகையான மலர்களும் எப்போதும் பூத்துக் குலுங்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மலரான ஆர்கிடெக் வகையைச் சேர்ந்த சிம்பிடியம் பூ பூத்துள்ளது. இந்தப் பூவை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
பூங்காவில் ரூ.1 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள்: இதனிடையே கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை மேம்படுத்தும் வகையில் ரூ. 1 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா, கழிப்பறை வசதி, மற்றும் நுழைவுக் கட்டணம் வசூல் மையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளன.
இந்தப் பணிகள் வரும் சீசனுக்குள் நிறைவடைந்து பூங்கா புதுப்பொலிவு பெறும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.