கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஜெனரேட்டர் இயங்காததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
கொடைக்கானலில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்குள்ள அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காததால் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. செல்லிடப்பேசி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு ஊசி போடப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனால் நோயாளிகள் பெரும் அவதியடைந்தனர். அதே போல் ஹீட்டர் வசதி இல்லாததால் உள்நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாள்களாக அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே கருவி செயல்படாததால் நோயாளிகள் தனியார் எக்ஸ்ரே நிறுவனத்தை நாடும் நிலையும் உள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கூறியதாவது: இந்த அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்தும் போதிய அளவு வசதியில்லை. இங்குள்ள பல்வேறு குறைகள், பிரச்னைகள் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றார்.