பழனியை அடுத்த ஆயக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், அவற்றை சீரமைக்க வேண்டும் என, கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆயக்குடி மக்கள் மன்றத்தின் தலைவர் கமலக்கண்ணன், கல்வித் துறை அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை: பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஏறக்குறைய 215 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை இல்லாத நிலை நீடிக்கிறது. ஆழ்துளைக் கிணற்றிலும் தண்ணீர் இல்லாததால், சுகாதாரக்கேடு நிலவுகிறது. மேலும், 9 வகுப்பறைகளில் 4 கட்டடங்களின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், மாணவ, மாணவியர் அச்சத்துடன் கல்வி பயில வேண்டி உள்ளது. இப்பள்ளிக்கு வழங்கப்படும் மேலாண்மை நிதியை முறையாகப் பயன்படுத்தினால் இதுபோன்ற சூழல் ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, மாணவர்களின் நலன்கருதி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சுகாதாரமான கல்வி வழங்க கல்வித் துறை அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.