பெரிய அய்யம்புள்ளி குளத்தில் செங்கல்சூளைக்கு மண் எடுப்பதாக விவசாயிகள் புகார்
பழனியை அடுத்த பெரிய அய்யம்புள்ளி குளத்தில் இரவு, பகல் பாராமல் செங்கல் சூளைகளுக்கு மண் எடுப்பதால் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் உருவாகி உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விவசாயப் பயன்பாட்டுக்காக சவடு மற்றும் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு வருவாய்த்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். பழனியை அடுத்த பெரிய அய்யம்புள்ளி குளத்திலும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் நூறு ஏக்கர் பரப்பளவுள்ள அய்யம்புள்ளி குளத்தில் வண்டல் மண் எடுக்க பெற்ற அனுமதியை வைத்து சிலர் முறைகேடாக செங்கல் சூளைகளுக்கு மண் எடுத்து வருகின்றனர். இதற்காக குளத்தின் கரையை உடைத்து பாதை அமைத்ததோடு மட்டுமன்றி இரவு, பகல் பாராமல் ஏராளமான இயந்திரங்களின் உதவியோடு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் எடுத்து செல்கின்றனர். இதனால் குளத்தின் மதகு பகுதிக்கு தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கரைகளின் ஓரத்தில் அள்ளப்படுவதால் மழை காலங்களில் நீர் தேங்கும் போது கரை உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து குளத்தின் பாசன விவசாய சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், இரவு பகலாக நடைபெறும் மண் திருட்டு குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. இப்படி மண் அள்ளுவதால் இந்த குளத்தில் இருந்து கழிவு நீரை பெறும் மூன்று குளங்கள் பாதிப்படைவதோடு நூற்றுக்கணக்கான ஏக்கர்
நிலங்களும் வானம் பார்த்த பூமியாகிவிடும் என்றார்.
குளத்தின் பாசன சங்க செயற்குழு உறுப்பினர் கருப்பணன் கூறுகையில், கரைகளின் ஓரத்திலேயே மண் அள்ளுகின்றனர். இதனால் மதகு பகுதிக்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்படும். இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இந்த பகுதிக்கு உரிய கிராம நிர்வாக அலுவலர் அல்லாமல், வேறு பகுதி கிராம நிர்வாக அலுவலரின் கட்டுப்பாட்டின் குளத்தில் மண் அள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு விவசாயிகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.