திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை அழுகிய மீன்களை கடத்திச் சென்ற கன்டெய்னர் லாரியை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கன்டெய்னர் லாரியில் அழுகிய மீன்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்து. இதையடுத்து, திண்டுக்கல் வழியாக ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்ற அந்த கன்டெய்னர் லாரியை மூலச்சத்திரம் அருகே உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கே.நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் மடக்கிப் பிடித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு லாரியை சோதனையிட்ட போது அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்டிகளில் அழுகிய மீன்கள் இருந்தது தெரிய வந்தது.
அந்த மீன்களில் தூர்நாற்றம் வீசியதுடன், ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்தன. எனவே இவற்றை உணவுக்கோ, கோழி மற்றும் மாட்டுத் தீவனத்துக்கோ பயன்படுத்த முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரி கே.நடராஜன் கூறியதாவது: பிடிபட்ட அந்த லாரி கொல்லத்தில் இருந்து கூடங்குளத்துக்கு சென்று, அங்கிருந்து கர்நாடக மாநிலம் மங்களாபுரம் சென்று கொண்டு இருந்தது தெரியவந்தது. இந்த லாரியின் ஓட்டுநர்கள் முன்னுக்குப் முரணாக பதில் தெரிவித்து வருகின்றனர். இதனால் போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எங்கிருந்து இந்த மீன்கள் கடத்தி வரப்பட்டன? எதற்காக கடத்திப் செல்லப்படுகின்றன என்ற விளக்கத்தை அவர்களிடம் கேட்டு வருகிறோம்.
இந்த மீன்களை எதற்கும் பயன்படுத்த முடியாது. எனவே ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பணியாளர்களை கொண்டு இந்த மீன்கள் அழிக்கப்படும் என்றார்.