10 ஆம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் சிறப்பாக பயின்ற 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது மற்றும் காசோலையினை ஆட்சியர் டி.ஜி.வினய் திங்கள்கிழமை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். அதன்படி, 12 முதியோர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து இலவச கண் கண்ணாடி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 23 மனவளர்ச்சி குன்றிய 8 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் நடைபழகும் வண்டியும், 50 மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
18 ஆவது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற, நிலக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.நிலாவதி, உஷாநந்தினி ஆகியோருக்கு ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21ஆவது காமன்வெல்த் போட்டியில் இந்திய கூடைபந்து அணியில் திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் முதல் முறையாக இடம் பெற்றிருந்த மாணவர்கள் கொடைரோடு ஜீவானந்தம், திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த ஜஸ்டீன் ஆரோக்கியராஜ் ஆகியோருக்கும் ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்பாக பயின்ற 30 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் காசோலையினையும் ஆட்சியர் வினய் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் செளந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.