பழனியை அடுத்த கோம்பைப்பட்டி பெரியதுரையான் கோயில் அருகே வியாழக்கிழமை இரவு தென்னந்தோப்பு மற்றும் வயல்களில் காட்டு யானை மரங்களை முறித்தும், பயிர்களை நாசப்படுத்தியும் சென்றது.
பழனியை அடுத்த கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டுமாடுகள், மான்கள், சிறுத்தை, புலி என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. விலங்குகளுக்கு வேண்டிய குடிநீர், உணவுகள் மலையடிவாரப் பகுதியில் கிடைப்பதால் வனவிலங்குகள் இடம்பெயர மனமின்றி இங்கேயே முகாமிட்டுள்ளன. தற்போது நல்ல மழை பெய்துள்ள நிலையில் பழனி அடிவாரம் கோம்பைப்பட்டி பகுதிகளில் மக்காச்சோளம், தென்னை, பருத்தி ஆகியன செழித்து வளர்ந்துள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஒற்றை காட்டு யானை, நாகராஜ் என்பவரது தென்னந்தோப்பில் நுழைந்து சிறிய தென்னை மரங்களை முறித்து அட்டகாசம் செய்தது. இதில், சுமார் பத்து மரங்கள் குருத்து ஒடிந்தும், சாய்ந்தும் சேதமடைந்தது.
மேலும், அருகே உள்ள துரை என்பவரின் வயலில் மக்காச்சோளப் பயிர்களை சேதப்படுத்தியதோடு வயல் முழுக்க நடந்ததில் பல இடங்களிலும் வளர்ந்திருந்த பருத்தி பயிர்கள் அழிந்தது. யானையின் கால் தடங்கள் சுமார் முக்கால் அடி ஆழத்துக்கு வழிநெடுக பதிந்திருந்தது.
கோம்பைப்பட்டி பகுதி மக்கள் நீண்ட காலமாகவே வனவிலங்குகள் வயல்களுக்குள் புகுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யானைகள் தற்போது பயிர்களை சேதம் செய்யத் தொடங்கியுள்ளது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கவும், வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க அகழி அமைக்கவும் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.