மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. பிப்ரவரி 28 ஆம் தேதி மாசித் தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், ஆண்டுதோறும் மாசித் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிற்பகல் திருக்கம்பத்துக்கு காணியாளர் அரிவாள் எடுத்துக் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யம்புள்ளி பகுதியில் தனியார் தோப்பிலிருந்து மரம் கம்பத்துக்காக வெட்டி எடுத்து வரப்பட்டு, வையாபுரிக் கண்மாய் அரசமரத்து விநாயகர் படித்துறையில் திருக்கம்பம் அலங்கரித்தல் நடைபெற்றது. கம்பம் சாட்டு உத்தரவு கிடைத்ததைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பம் மாரியம்மன் கோயில் முன்பு நிலைநிறுத்தப்பட்டது. அதையடுத்து, நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மி பாடல்கள் பாட, பக்தர்கள் திரிசூல வடிவிலான கம்பத்துக்கு பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். இதையொட்டி, பிப்ரவரி 20 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தலும், பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு அருள்மிகு மாரியம்மனுக்கு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான மாசித் தேரோட்டம் பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.