செம்பட்டி அருகே ஓட்டுநரை கீழே தள்ளி விட்டு, காரை கும்பல் கடத்திச் சென்றுள்ளது.
மதுரை நாகமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர், கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் சேலம் செல்லவேண்டும் என்றும், அதற்கான வாடகை எவ்வளவு என்றும் கேட்டுள்ளார்.
அதன்பின், சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க 4 நபர்களை ஏற்றிக் கொண்டு, கணேசனே காரை சேலம் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். திண்டுக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே கார் சென்றபோது, காரில் வந்த நபர்கள் ஓட்டுநர் கணேசனை மிரட்டி, பின் இருக்கையில் அமரச் செய்துள்ளனர். பின்னர், அவர்கள் காரை மீண்டும் மதுரை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளனர்.
செம்பட்டி அடுத்துள்ள ஜே.புதுக்கோட்டை அருகே சென்ற போது, கணேசனிடம் இருந்த ரூ. 3 ஆயிரம் பணம் மற்றும் வங்கி ஏடிஎம் அட்டைகளையும் பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு காருடன் தப்பிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்து கணேசன் செவ்வாய்க்கிழமை செம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து காரை கடத்திச் சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.