பழனி அருள்மிகு பெரியாவுடையார் கோயிலில் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான பரதக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். போகர் பழனி ஆதீனம் சீர்வளர் சீர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சீனிவாசன், கோவை பீளமேடு குமரகுரு நாட்டியாலயா தாரணி சாய்ராம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரை நிகழ்த்தினர். துணை ஆணையர் மேனகா, சாய்கிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் கீதா சுப்புராஜ் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். மங்கள வாத்தியத்தைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மேடையில் பரதக் கலைஞர்களின் நாட்டியம் நடைபெற்றது.
ராஜகுமாரம்பாள்புரம் சுந்தர அய்யப்பன் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், மீனா கல்ச்சுரல் அகாதெமி மாணவ, மாணவியரின் பரதநாட்டியமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, குருகுலம் சபா, சென்னை சித்ரா, கோவை போத்தனூர் ஆராதனா பள்ளி மாணவ, மாணவியரின் பரதநாட்டியம் நடைபெற்றது. திருப்பூர் கவிநயா நாட்டியாலயா சார்பில் சூரசம்ஹார நாட்டிய நாடகம் பலரையும் ஈர்த்தது.