அய்யம்பாளையம் மற்றும் ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே, இந்த 2 இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: மாவட்ட நிர்வாகத்திடமிருந்து முன் அனுமதி பெற்றால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் உத்தரவுப்படி, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கொண்ட ஜல்லிக்கட்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தவசிமடை, கலையமுத்தூர், பில்லமநாயக்கன்பட்டி உள்பட 10 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதில், அய்யம்பாளையம், ஏ.வெள்ளோடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இருவேறு குழுக்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதால், உள்ளூர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சுமூக முடிவு கிடைத்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படும் என்றார்.
கூட்டத்துக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, பழனி சார்ஆட்சியர் அருண்ராஜ், திண்டுக்கல் கோட்டாட்சியர் (பொ) ஜான்சன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) இந்திரவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.