பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் நடத்தப்பட்டு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
பழனி அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் பாவை விழாவையொட்டி திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள் நடைபெற்றன. பாசுரங்களில் இருந்து இசைப் போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என நான்கு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 186 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பழனியாண்டவர் கல்லூரி பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார் உள்ளிட்ட பலர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். 34 பேர் முதல் பரிசும், 29 பேர் இரண்டாம் பரிசும், 29 பேர் மூன்றாம் பரிசும், 21 பேர் ஆறுதல் பரிசும் பெற்றனர். மேலும் பங்கேற்ற 95 மாணவ, மாணவியருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் பழனிக்கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, தலைமையாசிரியர் முருகானந்தம், புலவர் செல்வி மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.