பழனி உழவர் சந்தையில் ரமலான் திருநாளை முன்னிட்டு ஒரே நாளில் நான்கு மணி நேரத்தில் ரூ. 4 லட்சத்துக்கு காய்கறிகள் விற்றுத் தீர்ந்தன.
தமிழகத்திலேயே சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையும் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பல டன் எடையிலான காய்கறிகளை கொண்டு வந்து விற்கின்றனர்.
இந்நிலையில் சனிக்கிழமை ரமலான் திருநாளை முன்னிட்டு அதிகாலை முதலே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்களை விற்க குவிந்தனர். அதே போல பொதுமக்களும் குவிந்தனர். 115 விவசாயிகளுக்கு காய்கறிகளை விற்க அனுமதி வழங்கப்பட்டது.
இதுகுறித்து உழவர் சந்தை அலுவலர் காளிமுத்து கூறுகையில், சாதாரண நாள்களில் சுமார் ஐந்து டன் வரையிலும், விடுமுறை நாட்களில் ஏழு டன் வரையிலும் காய்கள் விற்பனையாகும்.
இன்று ரமலான் மற்றும் முகூர்த்த நாள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்னிட்டு சுமார் நான்கு மணி நேரத்தில் 13.5 டன் எடையிலான தக்காளி, கத்திரி, வெண்டை, வெங்காயம், தேங்காய், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், அவரை போன்ற காய்கறிகளும், கொத்தமல்லி, புதினா போன்ற கீரை வகைகளும் விற்பனையாகின.
இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 4 லட்சம். நாளுக்கு நாள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. கூடுதல் இடத்தை நகராட்சி நிர்வாகம் வழங்கினால் இதை விரிவாக்கம் செய்ய வசதியாக இருக்கும் என்றார்.