திண்டுக்கல் அடுத்துள்ள ஏ.வெள்ளோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அடுத்துள்ள ஏ.வெள்ளோடு புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்டிருந்தன.
ல்லிக்கட்டுப் போட்டியை, திண்டுக்கல் கோட்டாட்சியர் இ. ஜான்சன் தொடக்கி வைத்தார். மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ஜெ. சாமுவேல் ஜெபராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து, வாடி வாசலுக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையின்போது, 3 காளையை தவிர்த்து, 318 காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
361 மாடுபிடி வீரர்களில் 7 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காளைகளைப் பிடிக்க முயன்றதில் காயமடைந்த 20 பேருக்கு தாற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் பலத்த காயமைடந்த 2 பேர், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.