வத்தலகுண்டு அருகே அமைக்கப்பட்டு வரும் 58-ஆம் கால்வாயிலிருந்து தெப்பத்துப்பட்டி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் வகையில் மதகு அமைக்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள தெப்பத்துப்பட்டி பகுதியில் உள்ள வைகை அணையில் 58-ஆம் கால்வாய்க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தெப்பத்துப்பட்டி பகுதியில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனிடையே, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், பணிகள் நடைபெறும் பகுதியை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், 58-ஆம் கால்வாயிலிருந்து தண்ணீர் வழங்கும்போது, தெப்பத்துப்பட்டி பகுதியில் உள்ள ஆரவல்லி கண்மாய் மற்றும் பெருமாள் கண்மாய்களுக்கு தண்ணீர் விட வேண்டும்.
அதற்கான மதகு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.